வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/12/27

நசிகேதனின் வரவறிந்தான் எமன்


13
ஓர்நாள் பிறகோர்நாள் பின்னோர்நாள் ஒன்றேலும்
சீர்காணா ஏரை எமன்கண்டான் - ஆர்த்தன்
முகத்திலகம் வெய்தறிந்தான் முந்து விருந்து
செகத்தகனம் செய்ச்சுடர் என்று.

    மூன்று நாட்கள் தொடர்ந்து (தன் வீட்டு வாயிலில்) கவனிப்பாரற்று இருந்த அழகிய நசிகேதனை எமன் பார்த்தான். களைத்துத் துன்புற்றிருந்தாலும் நசிகேதன் உலகத்தையே எரிக்க வல்லத் தீச்சுடர் என்பதை அவன் முகப் பொலிவிலிருந்துப் புரிந்து கொண்டான் (எமன்).


சீர் காணா ஏர்: மதிக்கப்படாத அழகு | கவனிப்பாரின்றிக் கிடந்த நசிகேதன்
ஆர்த்தன்: எளியவன், துன்பமுற்றவன் | பசி, களைப்பால் வாடிய நசிகேதன்
முகத்திலகம்: முக+திலகம் என்று பிரித்தால் பொலிவு, முகத்தில்+அகம் என்று பிரித்தால் 'உள்ளத்தைக் காட்டிய முகம்' என்று பொருள் | நசிகேதனின் அகமேன்மை புறத்தே தெரிந்தது
வெய்தறிந்தான்: வெய்து+அறிந்தான் | வெய்து என்றால் விரைவாக, விரும்பக்கூடியது (வெய்யது) என்றும் பொருளுண்டு. 'முகத்திலகம் வெய்து அறிந்தான்' என்று சேர்த்தால் 'முகப்பொலிவு விரும்பத்தக்கது என அறிந்தான்' என்றும், 'முகத்தில் அகம் வெய்து அறிந்தான்' என்று சேர்த்தால் 'உள்ளத்து ஆழத்தை வெளியே காட்டிய முகம் என்பதை விரைவாக அறிந்தான்' என்றும் பொருள் துய்க்கலாம்
முந்து: முதலில், எதிர்ப்பட்ட | 'வெய்தறிந்தான் முந்து' எனச் சேர்த்தால், 'எமன் அவசரமாக முதலில் தெரிந்து கொண்டான்' என்ற கருத்தாகும் | 'முந்து விருந்து' எனச் சேர்த்தால், 'முன்னாலிருக்கும், அல்லது, எதிரிலிருக்கும் விருந்தினன்' என்று பொருள்
செகத்தகனம் செய்ச்சுடர்: உலகத்தை அழிக்க வல்லத் தீச்சுடர், 'செய்ச்சுடர்' என்பதை வினைத்தொகையாகக் கொண்டால் மேலும் சுவை. (சான்றோர் சீற்றம் முக்காலத்திலும் சுடும் என்ற பொருளில்)



    னிதக் கண்டுபிடிப்புகளில் தீ முதன்மையானது. மனித நாகரீகத்துக்கு வழி வகுத்த மூன்று கண்டுபிடிப்புகளில் ஒன்று தீ என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். தீயின் தன்மை வியக்கத்தக்கது. சிறிய விளக்கொளியாக அமைதியின் சின்னமாக விளங்கும் தீ, பரந்து காட்டையும் நாட்டையும் கடலையும் அழிக்கும் தன்மை கொண்டது. அறிவும் அப்படித் தான். ஆக்கவும் அழிக்கவும் வல்லது. அறிவு மிகுந்த சான்றோரைப் பேணுதல் நம் கடமையாகும், அந்தச் சான்றோன் நம் பிள்ளை என்றாலும்.

ஆங்கிலத்தில் 'first impression' பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் பல பிரபல அமெரிக்க நிறுவனங்களில் 'creator of first impressions' என்று வரவேற்பறைப் பணியாளரை அழைத்தார்கள். அறிமுகம் சரிமுகமாக இருக்கவேண்டும் என்பது எத்தனை முக்கியமோ, சரிமுகத்தை உடனே அறியவேண்டும் என்பதும் அத்தனை முக்கியம். பல ஜப்பானிய நிறுவனங்களில் விருந்தினரைப் பற்றி முன்பே அறிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வார்கள்; விருந்தினர்களுக்கு வியப்பாக இருக்கும், தன்னைப் பற்றி இத்தனை தெரிந்து வைத்திருக்கிறார்களே என்று. விருந்தோம்பல் என்றாலும், இது ஒரு நுட்பமான மேலாண்மைத் தந்திரம். நம்மூர் மளிகைக் கடைகளிலும் இதைக் கவனிக்கலாம். முன்பின் பார்த்திராத வாடிக்கையைக் கூட உள்ளே நுழையும் பொழுதே 'அளந்து' விடும் தந்திரம். அதற்கேற்ப வரவேற்பார்கள்.

நசிகேதனைப் பார்த்த எமனின் செயலில் மேலாண்மை நுட்பம் புதைந்திருப்பதை இந்தப் பாடலிலும் பின்னாலும் பார்க்கலாம். மற்ற தேவர்களை விட காலதேவனுக்குப் பண்பு அதிகமென்பது போல் பல மதங்களில் சித்தரித்திருக்கிறார்கள். இந்து மதத்தில் எமனைத் தர்மராசன் என்றும் அழைக்கிறார்கள். நல்லதையும் அல்லாதையும் ஒருங்கே அறிந்து நியாயம் வழங்க வேண்டிய நிலையில் எமனைச் சித்தரித்திருக்கிறார்கள்.

    தூதர்கள் எமனைக் காணாது, நசிகேதனை எமன் வீட்டு வாயிலறையில் விட்டுச் சென்றனர். அங்கே மூன்று நாட்கள் எமனைச் சந்திக்காமல் உண்ண உணவோ பருக நீரோ, எந்த வகை வரவேற்பும் வசதியும் கொடுக்கப்படாமல் காத்திருந்தான் நசிகேதன். நான்காம் நாள் அவனைப் பற்றியும் அவன் அங்கு வந்த விதத்தைப் பற்றியும் அறிந்த எமன், நசிகேதனைச் சந்தித்தான். களைத்திருந்தாலும் சளைத்தவனல்லவே நசிகேதன்? அவன் முகப்பொலிவிலிருந்து, 'வந்திருப்பவன் சாதாரண விருந்தாளியல்ல, இவனுடைய அறிவுச் சுடர் உலகத்தை அழிக்கும் தீயாக மாறும் தன்மையுடையது' என்பதை அறிந்து கொண்டான்.

நசிகேதனை அழைத்து வந்த தூதர்கள், இறந்தவர்களைச் சேர்க்குமிடத்தில் அவனைச் சேர்க்காமல், தானமாக வழங்கப்பட்டது எமனுக்குச் சொந்தம் என்ற காரணத்தால், எமன் வீட்டில் விட்டுச் சென்றார்கள் எனலாம். அழையா விருந்தாளியென்றாலும், வீட்டுக்கு வந்த விருந்தினரை மூன்று நாட்கள் வாட விடுவது கொடுமையல்லவா? அதிலும் பச்சிளம் பாலகன், அவனைக் காக்க வைக்கலாமா? இதை உணர்ந்த எமன், உடனே தன் சேவர்களை அனுப்பி நசிகேதனை கவனிக்கச் சொல்லி, தானே அவனைப் பணிந்து வரவேற்றான்.

2010/12/24

எமதூதருடன் செல்ல நசிகேதன் விடைபெற்றான்


12
பெற்றோர் வருத்தமும் உற்றோரின் வேதனையும்
கற்றோர் கருத்தையுங் கட்டினான் - துற்றுத்
தடைமுற்றுந் தன்தமிழால் தீர்த்தான் வணங்கி
விடைபெற்றான் விண்ணேக வித்து.

    தாய் தந்தையின் துயரமும், உறவினர்களின் மனவேதனையும், அறிஞர்களின் மாற்றுக் கருத்துக்களையும் அடக்கினான். தன் ஆழ்ந்தக் கருத்துக்களாலும் இனிமையான உரையாலும், மேலும் தடைகளை நீக்கினான். அவையோரை வணங்கி, விண் போக விடைபெற்றான் நசிகேதன்.


கட்டினான்: அடக்கினான்
துற்று: பிறகு, மேற்கொண்டு
தமிழ்: செறிவுடைய இனிய மொழி, நசிகேதனின் ஆறுதல் பேச்சுக்கு ஆகிவந்தது
வித்து: விதை, சந்ததி, இங்கே நசிகேதனைக் குறிக்கிறது



    ணர்ச்சியும் உணர்வும் ஒன்றையொன்று சார்ந்திருந்தாலும், இரண்டுக்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. உணர்ச்சி நெஞ்சைத் தொடுவதில்லை. உணர்வு நம் நெஞ்சைத் தொடுகையில் புனிதமாகத் தோன்றினாலும், கண்ணையும் நெஞ்சையும் ஒரு சேரக் கட்ட வல்லது. உணர்வுகளுக்கு அடிமைப்படுவதால் கண்மூடித்தனங்களில் நிலை மறக்கிறோம். எத்தனை கற்றாலும் அறிவுரை பெற்றாலும், உணர்வு கலந்த நிகழ்வுகளைப் பற்றிய எண்ணங்களை மாற்றிக் கொள்வது நடைமுறையில் மிகவும் கடினம்.

தொலைந்தக் காதலைச் சுமையாகப் பிடித்துக் கொண்டு காலமெல்லாம் வாடுவோரைப் பார்க்கிறோமே? துன்பம் நேர்ந்தாலும் 'கல்லானாலும் கணவன்' என்ற நெறியைக் கடைபிடிக்கும் எத்தனை மாதர்களை அறிவோம்?! சூதாட்டம், கள், போதை, பக்தி போன்றவை உணர்ச்சியைக் கடந்து உணர்வைக் கைப்பற்றும் பொழுது அடிமையாகிறோம். சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டதால் ஏற்படுத்திக்கொண்ட உபாதைகளே. பாசமும் பந்தமும் அத்தகைய உணர்வுகளே. பாசமும் பந்தமும் நன்னெறிகள் போல் தோன்றினாலும் அவை பாசாங்கு நெறிகள். கண்களைக் கட்டித் தெருவில் நிறுத்தக் கூடியவை.

ஒரு நிகழ்வை, நிகழ்வின் செயல்-விளைவாகப் பார்த்துப் பழகினால் முழுமைக் கண்ணோட்டத்துடன், உணர்வுகளுக்குக் கட்டுப்படாமல் நடக்கலாம், முடிவெடுக்கலாம், வாழலாம்.

நசிகேதன் கதையின் ஒரு முக்கியக் கட்டம் இளவல் விடை. முழுமையானக் கண்ணோட்டமும் தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு சிறுவன், தன்னை விட முதியப் பெற்றோரையும் கற்றோரையும் தங்களின் கண்மூடித்தனங்களை அறியச் செய்தக் கட்டம். உணர்வுகளுக்கு அடிமையான அவையினரும், உணர்வுகளை வென்ற நசிகேதனும், எடுத்த முடிவுகளையும் செய்கைகளையும் பற்றிய இந்த கட்டத்தின் பாடம், இனிவரும் பகுதிகளுக்கு அடிப்படை எனலாம்.

    பெற்றோர்கள் அழுது புரண்டார்கள்; உறவினர்கள் துடித்தார்கள்; பொன்னால் செய்த நசிகேதனின் சிலையைத் தானமாக வழங்குவதும் சாஸ்திரப்படிச் செல்லும் என்று வேதங்கற்ற அறிஞர்கள் மாற்று வழிகள் சொன்னார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு, கலவரத்தையும் குறுக்கு வழிகளையும் கட்டுப்படுத்தி, தன் நிலையில் உறுதியாக நின்றான் நசிகேதன்.

தன்னுடையத் தெளிவானக் கருத்துக்களாலும் இனிமையான மொழியினாலும் அனைவருக்கும் ஆறுதல் அளித்துத் தூதர்களுடன் எமனூர் சென்ற நசிகேதனுக்கு, எமன் வீட்டில் எத்தகைய வரவேற்பு காத்திருந்தது?

2010/12/20

தடுக்காதீர் என்றான் வாசனிடம் நசிகேதன்


11
விதைப்பயிராய்ப் பின்விதை யாம்போலே வாழ்வின்
கதைப்பயின்றுங் கண்ணீர் விழலே - எதையும்நாம்
கற்றறிந்தே செய்யுங் குலமன்றோ? நீர்தடுத்தால்
முற்றகையா மேயும் மொழி.

    விதை பயிராகிறது; பின் பயிரே விதையாகிறது. வாழ்வும் அப்படியே. இந்த உண்மையை அறிந்தும் வருந்துவது பயனற்றது. எதையும் நன்கு ஆய்ந்து செயலாற்றும் குலத்தில் வந்தவர்கள் நாம். என்னைப் போகவிடாதுத் தடுத்தால், முள் போன்றதாகி விடும் உமது சொல் (என்றான் நசிகேதன் தந்தையிடம்).

விழலே: பயனற்றதே, வீணே
முற்றகையாம்: முள்+தகையாம், முள் போன்றதாகும்



    முள் தைக்கும் பொழுது வலிக்கிறது. தைத்த முள்ளை விலக்கும் போதும் வலிக்கிறது. சில சொற்கள் அவ்வகையே. வாக்கு கொடுத்துத் திரும்பப் பெறுவது முள்ளுக்கு ஒப்பாகும். ஆத்திரப் பேச்சு, தீச்சொல்; சுடும். ஏமாற்றுப் பேச்சு, முட்சொல்; முன்னும் பின்னும் வலிக்கும்.

மனப்பக்குவத்தின் மறுபக்கம் சுயஅறிவு. சுயஅறிவின் அச்சாணி? தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை கொண்டவர்கள் எதையும் முழுமைக் கண்ணோட்டத்துடன் காணும் திறனுடையவர்கள். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம், தம்பட்டம், பொறாமை இருப்பதில்லை. தன்னம்பிக்கை குறையும் போதே கண்டவற்றையும் காணாதவற்றையும் நம்புகிறோம்; அதிகமாகப் பேசத் தொடங்குகிறோம்; கண்மூடித்தனமாக இயங்குகிறோம். தன்னம்பிக்கையே அமைதி மரத்துக்கான ஆணி வேர். நம்மினும் இளையவருக்கு நாம் வழங்கக் கூடிய நிரந்தரச் சொத்துக்களில் ஒன்று, தன்னம்பிக்கை பற்றியத் தெளிவு.

    'வாக்குத் தவறியச் சுயநலக்காரன்' என்ற பழியை விட, 'அவசரத்தில் அறிவிழந்தவன்' என்ற பழியில் குறைந்த இழிவிருப்பதை அறிந்த நசிகேதன், தந்தையின் மேல் கருணை கொண்டு தன்னைத் தடுக்க வேண்டாம் என்றான். நசிகேதனின் பண்புள்ள சொல்லாலும் செயலாலும் வாசனுக்கு வாக்குத் தவறியப் பழ ஏற்படவில்லை. நசிகேதனின் ஆறுதலுரையில் தெளிந்த பக்குவமும், முழுமைக் கண்ணோடமும், மேலாக, அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் விரவியிருப்பதை அறியலாம். நசிகேதனின் தன்னம்பிக்கை எத்தனை வலுவானதென்பது இனி வரும் பாடல்களில் தெற்றென விளங்கும்.

விதையானது பயிராகி மீண்டும் விதையாகும் விவரத்தை எடுத்துச் சொன்ன நசிகேதன், "தந்தையே, பிறந்தவரெல்லாம் இறந்து மீண்டும் இந்த உலகில் பிறப்பதை நீங்கள் அறிந்தவர் தானே? என்றோ ஒருநாள் இறக்கத்தானே போகிறேன்? இன்னொரு நாள் எமன் வீட்டிற்கு போவதால், யாருக்கென்ன நன்மை? இன்றைக்கு நான் எமன் வீட்டுக்குப் போவதால் உங்களுக்காவது நன்மை உண்டாகுமே? உங்களுக்கு நன்மை கிடைப்பதற்காக எமனுலகம் போகும் வாய்ப்பு பொன்னானது அல்லவா?" என்றான்.

"ஐயா, சொன்னதைச் செய்வதும் செய்வதைச் சொல்வதும் நம் குலவழக்கம் அல்லவா? எந்தச் செயலையும் எண்ணித் துணியும் கூட்டத்தில் வந்தவரல்லவா நாம்? நீங்கள் அவசரத்தில் சொன்னது போல் தோன்றினாலும், குலகுணம் உங்களுள் ஊறியதால் இது நன்மையிலேயே முடியும். கவலையை விடுங்கள்" என்றான். தந்தையின் செயல் முட்டாள்தனமானதென்றாலும், இடக்கரடக்கல், அவையடக்கம், முதியவர் பேணல் எனும் உயர்ந்த பண்புகளைக் கடைபிடித்து தந்தையின் செய்கையில் பொதிந்திருந்த நன்மையை மட்டும் எடுத்துச் சொன்னான், பால் பிரிக்கத் தெரிந்த அன்னப்பிள்ளை.

தந்தை இன்னும் தெளியாதது கண்டு, தன் இறுதி வாதத்தை முன் வைத்தான். "தந்தையே, நீங்கள் அவசரமாகக் கொடுத்த வாக்கு என்றே வைப்போம். அதைத் திருப்பிக் கொண்டால் இன்னும் கேடல்லவா? உங்கள் பெயருக்கு மேலும் இழுக்கு அல்லவா? தைக்கும் பொழுதும் பிரிக்கும் பொழுதும் துன்பப்படுத்தும் முள் போன்றதாகிவிடுமே உம் சொல்?" என்றான்.

தந்தை ஓரளவுக்கு அமைதியானது கண்டு, அங்கிருந்த அனைவரிடமும் விடைபெறத் தொடங்கினான் நசிகேதன்.

2010/12/16

வாசன் மேலும் வருந்தினான்


10
வேகத்தில் விட்டசொல் வாகோ? வதகனுக்கு
யாகத்தில் வேறேனும் ஈகுமோ? வேகும்
உலையிலே நெல்மீட்கும் உன்மத்த மோயென்
நிலையிலாச் சொல்லின் விலை?

    வசரத்தில் கொடுத்த வாக்கு பொருந்துமோ? யாகத்தில் எமனுக்கு வேறேதும் கொடுக்க முடியுமோ? (என் செயல்) கொதிக்கும் சோற்றிலிருந்து நெல்லை மீட்க முயலும் மடத்தனமோ? இதுவே என் அறிவற்றச் சொல்லுக்கு விலையோ?!

வாகு: பொருத்தம், அழகு
வதகன்: மரணத்தைத் தருபவன், இங்கே எமனைக் குறிக்கிறது
ஈகுதல்: வழங்குதல்
உன்மத்தம்: அறிவு மயக்கம்



    துயரத்திடம் ஒரு கெட்டப் பழக்கம் உண்டு; எப்பொழுதும் தாமதமாகவே வரும். அறியாமை மின்னலைத் தொடர்வது, அறிவு இடி. பிறகு, துயர மழை. சொல்லின் தாக்கத்தையோ செயலின் குரூரத்தையோ கண்ணீரால் கழுவ முடியுமா? வேறு ஏதாவது வழியில் ஈடுகட்ட முடியுமா? எல்லாம் சிந்தித்து, முடிவில் விளைவுகள் மறைக்க முடியாத, மறக்க முடியாத வடுக்கள் என்ற புரிதல் ஏற்பட்டக் கணமே, துயரம் நிரந்தரச் சுமையாக மாறிவிடுகிறது.

சுமையை எங்கே இறக்கி வைப்பது?

மனம் என்பது, பிறக்கும் பொழுது பல அறைகளைக் கொண்டப் பெரிய வீடாகப் பிறக்கிறது. தன்னம்பிக்கை, அன்பு, கருணை, பெருந்தன்மை, மனிதாபிமானம், பொறுமை, மகிழ்ச்சி போன்ற அறைகள் பிறக்கும் பொழுதே நிரம்பி வழிவன. மனவீட்டில் இரண்டு அறைகள் வித்தியாசமானவை. ஒரு அறை முழு வெற்றிடமாகவும், மற்றது அரை வெற்றிடமாகவும் பிறக்கிறது. முழு வெற்றிடமாகப் பிறக்கும் அறையின் பெயர் நிம்மதி. தெளிந்த சொல்லாலும் செயலாலும் சிறுகச்சிறுக நிம்மதியைச் சேர்த்துச் சேமிக்க வேண்டியக் காரணத்தால் இந்த அறை முழு வெற்றிடமாகப் பிறக்கிறது.

சுமையை எங்கே இறக்கி வைப்பது என்ற கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கிறது. 'நிம்மதி என்ற அறையில் ஏதுமில்லையே? அங்கே வைப்போம்' என்று இறக்கி விடுகிறது மனம். நிம்மதிக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம், அறிவற்ற சொல் செயல்களால் சேர்த்தத் துயரச் சுமைகளுக்கு நிரந்தரக் கிடங்காகி விடுகிறது.

இரண்டு வித்தியாசமான அறைகளில், ஒன்று நிம்மதி. இன்னொன்று? அறிவு. பிறக்கும் போது பாதி அறிவு, பாதி வெற்றிடமாகப் பிறக்கிறது. நிம்மதி சேரும் அதே நேரம் உடன் வரும் அறிவும் சேர, வெற்றிடம் நிரம்புகிறது; அல்லது, துயரச்சுமை சேரச்சேர உடன் வந்த அறியாமை எனும் புதுக்குடி, இருந்த அறிவை மெள்ளத் துரத்தி விடுகிறது.

இதன் நடுவே, அறியாமை மற்றும் துயரச்சுமையுடன் குடியிருக்கப் பிடிக்காமல் தன்னம்பிக்கை பொறுமை கருணை மனிதாபிமானம் போன்றவை, தத்தம் அறைகளை விட்டுத் தலைதெறிக்க ஓடத் தொடங்குகின்றன. மகிழ்ச்சி முதலில் ஓடுகிறது. முடிவில், மனம் எனும் வீட்டில் பல வெற்றிடங்களுக்கு நடுவே அறியாமை மட்டும் துயரச்சுமையுடன் ஆட்டம் போடுகிறது. எண்கட்டு என்பது இது தான்.

ஞாயிறு காலைகளில் வெளிவீடெங்கும் தூசு தட்டிச் சுத்தம் செய்வது போல், உள்வீட்டையும் அவ்வப்போது சுத்தம் செய்ய வழி தெரிந்தால் எவ்வளவோ மேன்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    ன்னன் வாசன், சுமை தாங்காமல் துடித்தான். குறுக்கு வழிகள் தோன்றின. அவசரமாகக் கொடுத்த வாக்கு செல்லாது என்று சொல்வதா? வந்திருக்கும் எமதூதருக்கு வேறு ஏதாவது கொடுத்து 'அட்ஜஸ்ட்' செய்து விடுவதா? 'இதென்ன சோதனை!' என்று சோர்ந்தான். அண்டவாகை வேள்வியில் தானம் கொடுப்பதாகச் சொன்னது கொடுத்தது போலவே என்பதால், வாக்கைத் திரும்பப் பெற முடியாதுத் தவித்தான். தான் அறியாமல் சொன்ன சொல்லுக்குக் கொடுக்க நேர்ந்த விலையை எண்ணி நிம்மதியிழந்து துயரத்தில் ஆழ்ந்தான்.

வேகும் சோற்றிலிருந்து நெல்லை எடுக்க இயலுமோ? சோறு வடிக்க எண்ணி வைத்த உலை பொங்குகிறது. நெல் அரிசியாகி உலையில் விழுந்து சோறாகிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து நெல் மீட்பது இயலாதது மட்டுமல்ல, மடத்தனம் அல்லவா? மன்னன் தன்னுடையதை அறிவில்லாமல் தகாத தானம் கொடுத்த கணமே, மகன் தனக்குச் சொந்தமில்லை என்றாகிவிட்டது. தானம் கொடுத்தது தெரிந்ததும், எமதூதர்கள் தங்களுக்குச் சொந்தமானதைப் பெற வந்துவிட்டார்கள். இப்போது இன்னொருவருடைய பொருளை முன்போல் தனக்குச் சொந்தமாக்குவதென்பது முடிகிற செயலா, முட்டாள்தனமா?

எமதூதர்களைப் பார்த்தான் நசிகேதன். அவர்களுடன் போகுமுன், துயரச்சுமையில் வருந்தியழும் தந்தைக்கு ஆறுதல் சொல்லி விடை பெற எண்ணினான். ஆழ்ந்தத் தத்துவமும் செறிந்த பண்பும் கலந்த நெறியொன்றை எடுத்துச் சொல்லித் தேற்ற, வாசனை அணுகினான்.

2010/12/14

நசிகேதனைப் போகவிடாது தடுத்தான் வாசன்


9
புண்பட்ட நெஞ்சாலும் பண்பட்டுப் பேசுமுன்
கண்பட்டக் கோடெல்லாம் வண்சிறப்பு - எண்கட்டி
ஒண்கெட்டப் பண்ணிட்டுச் செண்கெட்டச் சேறெந்தன்
மண்தொட்டே மன்னித் திரு.

    னம் புண்பட்டாலும் குணம் குறையாமல் பேசும் திறன் கொண்ட உன் கண் பார்வை பட்ட இடமெல்லாம் சிறப்படையும்; விதியின் சூழ்ச்சியில் சிக்கி நெறி தவறிப் பேசியதால் (பெருமையிழந்து) கொண்டை இழந்த சேவல் போல் நிற்கும் என்னை மன்னித்து, என்னுடன் இந்த உலகத்திலேயே தங்கியிரு (என்று மன்னன் நசிகேதனிடம் சொன்னான்)

கண்பட்டக் கோடெல்லாம்: கண்பட்ட இடமெல்லாம் (கோடு:எல்லை)
வண்சிறப்பு: மிகுதியான சிறப்பு
எண் கட்டி: வினைச்சுழலில் சிக்கி ('கர்மம்', 'ப்ராரப்தம்' என்று வழங்கப்படும் வினைச் சூழ்ச்சி, சுழற்சி | எண்:வினை)
ஒண் கெட்டப் பண் இட்டு: பொருந்தாத, நெறி தவறிய நிந்தையை, இகழ்ச்சியைச் செய்து, பொருந்தாத ஒழுக்கத்தைக் கடைபிடித்து (ஒண்: பொருத்தம், நெறி | பண்: நிந்தை, ஒழுக்கம்)
செண் கெட்டச் சேறு: கொண்டை இழந்த சேவல்



    றியாமை மின்னல், கண்மூடச் செய்கிறது; தொடர்ந்து வரும் அறிவின் இடியோசை, விழிக்கச் செய்கிறது. 'என்ன செயல் செய்தோம்' என்று வெட்கமும் வேதனையும் பட வைக்கிறது. கடவுள் முதல் மனிதர் வரை விதிவிலக்கில்லாமல் சொல்லிழுக்குப் பட்டவர்களைக் காணலாம். அவசரத்தினாலும் ஆத்திரத்தினாலும் ஏற்படக்கூடிய நாசங்களைத் தவிர்க்க, அன்பும் அமைதியும் தான் வழி. சிறிய அளவிலே, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம், அன்பையும் அமைதியையும் கடைபிடிக்க முடிந்தால் அதன் மொத்த விளைவு மகத்தானதாக இருக்கும்.

    ன் ஆத்திரத்தின் விளைவைப் புரிந்து கொண்ட மன்னன், மகன் நசிகேதனின் கேள்வியைக் கேட்டு இரங்கினான். "எப்பேற்பட்ட பிள்ளை இது!" என்று அவனுக்கும் தோன்றியது. "ஐயா, நீ பார்த்தாலே போதும், அந்த இடம் சிறந்து விடும்" என்றான். 'எமனுக்கு உன்னால் பயனுண்டு, கவலைப்படாதே' என்றாலும், அவன் மனதில், 'இந்தப் பிள்ளையினால் எமனை விட தனக்கல்லவா மேன்மை!' என்ற ஏக்கம் தாக்கியது.

மன்னன் என்ன சொன்னாலும் செய்தாலும் இனி மக்கள் எள்ளி நகைப்பார்களே! கொக்கரித்தாலும், கொண்டை இழந்த சேவலுக்கு மதிப்பு ஏது? தானும், தன் தீச்சொல்லின் விளைவால், பெருமையிழந்ததை உணர்ந்தான் வாசன். 'கொடுத்த வாக்கு கொடுத்ததே' என்பது அவனுக்குப் புரிந்தாலும், நசிகேதனிடம் தான் சொன்னதைப் பொருட்படுத்தாமல், தவறை மன்னித்துத் தன்னுடனேயே இருக்க வேண்டினான். தந்தையின் நிலை, கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கியக் கதை என்பதை அறிந்தும் அமைதி காத்தான் நசிகேதன். சில கணங்களில் நசிகேதனைத் தானம் பெற எமனின் தூதர்கள் வருவார்களே என்று பதைத்து, மன்னன் இன்னும் புலம்பினான்.

2010/12/11

தந்தையைத் தேற்றினான் நசிகேதன்


8
உன்னாது சொன்னாலும் உத்தமரே இத்தானம்
பின்னாள் பெரும்பேறே என்றறிவீர் - என்னளவில்
முன்னவன் நானெனினும் மூத்தோருள் நாசனுக்கிச்
சின்னவனால் என்ன சிறப்பு?

    சிந்திக்காமல் சொல்லியிருந்தாலும், உத்தமராகிய நீங்கள் பின்னாளில் பெறப்போகும் பெரும்பேறே இந்தத் தானமாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். என் வயதொத்தவருள் நான் சிறந்தவன் என்றாலும், என்னை விட முதிர்ந்தவர்கள் இருக்குமிடத்தில் எமனுக்கு என்னால் என்ன பயன்? (என்று கேட்டான் நசிகேதன்).

உன்னாது: சிந்திக்காமல்
நாசன்: எமன்



    வீட்டில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பந்து பட்டுக் கணணாடிப் பொருள் உடைந்துவிட்டது. என்ன செய்கிறோம்? பிள்ளையைக் கடிந்து கொள்கிறோம் அல்லது இரண்டு அடி முதுகிலும் தலையிலும் வைக்கிறோம். உடைந்த பொருள் திரும்பி வரப்போவதில்லை. கடிந்ததால், பிள்ளையின் மனதில் நம்மைப் பற்றி ஒரு பயமும் வெறுப்பும் பதிந்ததே தவிர, தன் செயலின் படிப்பினை மறந்துவிட்டது. உடன்படாத செயலைச் செய்தாரென்று மனைவியையோ கணவனையோ கடிந்து பேசுகிறோம். நடந்ததை மாற்ற முடியாது. மேலாக, காழ்ப்பு வேறு சேர்ந்து விட்டது.

'நடந்தது' என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 'நடந்ததை மாற்ற முடியாது' என்பதை அறிந்துகொள்ளவே முடியும். அறிந்துகொண்டால், நம் செயல்களும் அதற்கேற்ப அமையும். புரிதலுக்கும் அறிதலுக்கும் உள்ள வேறுபாடு இதுவே. "நீங்கள் சொல்வது புரிகிறது" என்று தலையாட்டிவிட்டு மீண்டும் செய்ததையே செய்பவர்களை நாளில் எத்தனை முறை சந்திக்கிறோம்?! அவர்களுக்கு 'அறியும் சக்தி' இல்லையென்பதை உணர்ந்து, அதற்கேற்ப நடப்பதே நன்று.

தனக்கோ அல்லது இன்னொரு உயிருக்கோ ஆபத்து இல்லாத சூழலில், நடந்து முடிந்த ஒரு செயலுக்கான நம் எண்ணங்களையும் எதிர்செயலையும் வெளிப்படுத்தும் முன்னால், நிதானிக்கச் சொல்கிறார்கள். பெருமூச்சுகள் விடவும், பத்து வரை எண்ணவும், வெளியே சுற்றி வரவும் பலவகை வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

எதிர்பாராத நிகழ்ச்சிகளைச் சந்திக்கும்போது, தெய்வத்தையோ விதியையோ மற்றவற்றையோ போற்றாமலும் பழியாமலும், நிகழ்வுகளில் அடங்கியிருக்கும் நன்மை-தீமை மற்றும் ஆக்கம்-அழிவுக்கான வாய்ப்புகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றபடி நடப்பது அறிவுள்ள மனிதரின் இலக்கணம் எனலாம். மனித அறிவுக்கு மட்டுமே இது சாத்தியம். (இதுபோன்ற ஆழ்ந்த கருத்துக்களைக் கேள்வி-பதில் பாணியில் உணர்த்தும் பல பாடல்கள் கடோபனிஷதத்தில இனித் தொடர்ந்து வருகின்றன.)

    ந்தை தன்னை எமனுக்குத் தானம் கொடுப்பான் என்பதை நசிகேதன் எனும் சிறுபிள்ளை தெரிந்து கொண்டிருக்கச் சாத்தியமில்லை. தானம் கொடுத்ததுமே அதன் பரிமாணம் அவனுக்குப் புரிகிறது. அந்த நிலையில் அவன் அறிந்து கொள்ளவேண்டியது ஒன்று மட்டுமே. 'தந்தையின் தானத்தைப் பயனுள்ள தானமாக்குவது எப்படி?' என்பதே. "ஏன் இப்படிச் செய்தீர்கள்? நான் உங்கள் மகனில்லையா? உங்களுக்குப் பொறுப்பில்லையா?" போன்ற கேள்விகளுக்கு அவன் மனதில் இடமில்லை.

அரச குடும்பத்திலே பிறந்து வளர்ந்த காரணத்தினாலும், அறிவைப் பயன்படுத்தும் இயல்பினாலும், தன் வயதொத்தவருள் நசிகேதன் முன்னணியில் நிற்கச் சாத்தியமுண்டு. அதனால் அவன் தன்னை, 'என்னளவில் முன்னவன்' என்றான். அது ஆணவமில்லாத விவரமறிந்த கருத்து என்பது, தொடரும் கேள்வியிலிருந்து புரிகிறது. போகுமிடமோ எமனுலகம். 'வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள் அங்கிருக்கையில், தான் எந்த விதத்தில் பயனுள்ளவனாக இருப்போம்?' என்று அவனுக்கு ஐயம் தோன்றியது. 'பயனில்லாத பசுக்களைப் போலவே தானும் பயனற்றத் தானமாகி விட்டால், தந்தைக்கு இன்னும் அல்லல் தீர்ந்தபாடில்லையே!' என்பது அவன் எண்ணம். 'தன்னைப் பயனுள்ளவனாக மாற்றிக் கொள்ள ஏதாவது வழி உண்டா?' என்று அவன் சிந்தித்ததாகவும் கொள்ளலாம். அந்த நிலையிலும், 'எமன் தன்னைப் பயனுள்ளவனாகக் கருத வேண்டுமே' என்று நசிகேதன் நினைத்தது, தந்தை மேல் அவன் கொண்டிருந்தக் கருணையைக் காட்டுகிறது.

கேள்வி கேட்குமுன்னர், 'தந்தை ஒரு முட்டாள் என்பதை எப்படிச் சொல்வது?' என்று நினைத்தான் நசிகேதன். எடுத்துச் சொல்லாவிட்டால், அடுத்த முறை மனைவியையோ வேறு ஏதாவது சொந்தத்தையோ தானம் கொடுத்து விட்டால்? நசிகேதன் அளந்து சொன்னான்: 'உன்னாது சொன்னீர்'. "சிந்திக்காமல் பேசிவிட்டீர்கள்" என்று தொடங்கினான். ஒரே ஒரு சூடு! நாட்டுக்கே மன்னன், சிந்திக்காமல் நடப்பது எத்தகைய அவமானம்! சிறுவனிடமிருந்து இப்படிப் பேச்சு வாங்குவது இன்னும் அவமானமாயிற்றே! நசிகேதன் அத்தோடு நிறுத்தாமல், "பரவாயில்லை, இது உங்களுக்குப் நற்பேறையே சேர்க்கும்" என்ற நற்செய்தியோடு அறிவுரையை வழங்கினான். "சிந்திக்காமல் செய்வதே இத்தகையப் பலனைத் தருமென்றால், மனிதராகிய நீங்கள் சிந்தித்து நடந்தால் இன்னும் பெரும்பேறு பல பெறலாமே?" என்பது மறைபொருள்.

    கனின் கேள்விக்கு மன்னன் தகுந்த பதில் சொன்னனா?

2010/12/09

விளைவை எண்ணி வாசன் துடித்தான்


7
தொல்லைப் பொறுக்காதுத் தூற்றி உறுக்கிலே
எல்லை மறந்துநான் ஏசினேன் - வல்லைக்
கடுஞ்சொல் விடுத்திந்த வேள்வியிலே கோடிக்
கொடுத்துங் கெடுத்தேன் குடி!

    ன் தொல்லை பொறுக்காமல், கோபத்தில் வரம்பு மீறி நான் ஏசினேன். கோடி தானங்கள் வேள்வியில் கொடுத்தாலும், வேகத்தில் கடுமையாகப் பேசி என் குடியை நானே கெடுத்தேன் (என்றான் மன்னன், மகனிடம்).

உறுக்கு: கோபம்
வல்லை: வேகம், கடுப்பு, வருத்தம்



    றிவு, அறியாமை இரண்டுமே சக்திகள் தாம். அறிவை விட, அறியாமை சக்திக்கு ஆயுள் குறைவு. தாக்கிய மறுகணமே தன் எதிரியான அறிவிடம் சரணடைந்து விடும். நம்மில் பெரும்பாலானோர், அறியாமையின் விளைவை அதன் தாக்கத்தில் செயல்பட்ட அடுத்த கணத்திலேயே புரிந்துகொண்டு விடுகிறோம். அறியாமை மறைந்து அறிவு தோன்றிவிடுகிறது. அறிவை விட ஆயுள் குறைவென்றாலும் அறியாமையின் தாக்கம் வலுவானது. அறிவைப் போலவே, பலநேரம் அறிவைக் காட்டிலும், அறியாமையின் விளைவு நிலைக்கிறது. அறியாமையின் ஒரு கணத் தாக்குதல் பல ஆயுளுக்கும் நிலைக்கும் தன்மையது. மூவாயிரம் வருடங்களுக்குப் பிறகும் வாசனின் அறியாமையைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் நடக்கிறதே! அறிவை அடக்க முடியாது. அறியாமையை அடக்க முடியும். இந்த உண்மையைக் காலங்கடந்தே புரிந்துகொள்கிறோம். நம் கண்மூடித்தனத்தினால் அறிவை அடக்க முயற்சி செய்கிறோம்; அறியாமையை அடக்காது நிற்கிறோம். விந்தையான முரண் அல்லவா?

சுயநலமும் பேராசையும் மனதுள் புகுந்து விட்டால் விலகாது. சாதாரண உரையாடலைக் கூட உடனே தன்னிலைப் படுத்திப் பேசுவதிலிருந்து
("இன்னிக்கு கணக்கில் நூத்துக்கு நூறு வாங்கினேன்பா" - "இதென்ன பிரமாதம், நான் எப்பவுமே கணக்குல நூத்துக்கு நூறு தான்" | "லட்ச ரூபாய் கொடுத்து இந்த நகை வாங்கினேன்" - "என்னோட நகை பத்து லட்சமாக்கும்" | "ஒரு நிமிசம் பொறுங்க, பிள்ளைக்கு சாப்பாடு போட்டு வரேன்" - "சம்பாதிக்கிற என்னை மொதல்ல கவனி" | "அடுத்த வருசம் ஸ்விட்சர்லந்து போலாம்னு இருக்கேன்" - "ஸ்விட்சர்லந்து நான் மூணு தடவை போயாச்சு" | "எனக்குக் காலைலந்து தலைவலி" - "எனக்குத் தலைவலி வரப்பல்லாம்...")
பொதுவாழ்வின் முக்கியச் செயல்கள் வரை
(வீட்டு-அலுவலக அரசியல், சகோதர-சுற்றத்துப் பழக்கம், நாட்டு-உலக நடப்பு)
இவற்றின் தாக்கத்தில் நாமும் நம்மைச் சுற்றி இருப்போரும் தினமும் பல விதங்களில் இயங்குகிறோம். நம் செயல்கள் பலநேரம் சுயநலம் மற்றும் பேராசையின் விளைவுகள், வடிவங்கள், என்பது நமக்குப் புரிவதில்லை. அல்லது, காலம் கடந்து புரிகிறது. அடுத்தவர் நம்முடன் உரையாடும் பொழுது ஒரு முறை, நாளில் ஒரே ஒரு முறை, நாம் கவனிப்பதோடு நிறுத்தி, தன்னிலைப்படுத்தாமல் உரையாடினால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.

    கனை எமனுலகு அனுப்பியதைக் கூடத் தன்னிலைப்படுத்தி வருந்துகிறான் மன்னன். தவறு செய்து புலம்பும் பொழுதும், "உன்னுடைய தொல்லையினால் இப்படிப் பேசினேன்" என்று பழியை மகன் மேல் சுமத்துவது போலிருக்கிறது. மகனைத் தானம் செய்த மாபெரும் தவறு ஒரு புறம் இருக்க, "கோடிப்பொன் தானம் போனதே, பயனில்லையே" என்ற ஆதங்கமே மேலாக வெளிப்படுகிறது. "குடி கெடுத்தேனே" என்ற வருத்தத்திலும், "சந்ததி இல்லாமற் போனதே" என்ற தன்னிழப்பு மேலோங்கியிருப்பதாகச் சொல்லலாம்.

தொடர்ந்துப் புலம்பியத் தந்தையைப் பொறுமையுடன் கவனித்ததால், அவர் புலம்பலிலும் பேராசை மற்றும் சுயநலச் சுவடுகள் இருப்பதை அறிந்த நசிகேதன், தன் தந்தையின் தவறை எடுத்துச் சொல்லி, தான் கேட்க எண்ணிய முக்கியக் கேள்வியைக் காலதாமதமின்றி அவர் முன் வைக்கத் துணிந்தான்.

2010/12/07

தன் தவறை உணர்ந்தான் வாசன்


6
உரைத்ததன் வன்சொல் உறைத்ததும் மன்னன்
தரைதொட்ட மீனாய்த் துடித்தான் - கரைந்தழுதான்
அந்தோ! எனதம்பே என்னை அடித்ததென்று
வெந்து புலம்பினான் வேந்து.

    தான் சொன்ன கொடிய சொற்களின் தாக்கத்தைப் புரிந்து கொண்ட அரசன், தரையில் விழுந்த மீன் போல் துடித்தான். உருகி அழுதான். "அந்தோ! நானெறிந்த அம்பு என் மேலே பாய்ந்ததே!" என்று வாடினான்.

வேந்து: அரசன்
ஈற்றடி உதவி: சிவகுமாரன்


    வசரத்திலும் ஆத்திரத்திலும் சொற்களை வீசுவது மிக எளிது. ஞானிகளும் மேதைகளும் கூட இப்படித் தவறுவதைப் பார்க்கிறோம்; மதக்குருக்களும் ஒழுக்க சீலர்களும் வழிகாட்டிகளுமே அடிக்கடி என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஏதாவது சொல்லி வம்பில் சிக்கிக்கொள்வதைப் பார்க்கிறோம்.

கொட்டினால் அள்ளக்கூடியதா சொல்? நாவினால் சுட்ட வடு ஆறாது எனும் இருவரி நெறியை மறக்கலாமா? நா காக்கத் தவறிய வாசனின் அறியாமை, நமக்கெல்லாம் ஒரு இலவசப் பாடம். எத்தனை பாடம் படித்தாலும், சாதாரண மனிதர்களுக்கு அளந்து பேசும் இயல்பு ஏற்படுவது மிகக் கடினம் என்பதே நடைமுறை உண்மை. சிறுபிள்ளையாக இருக்கையில், 'பேச்சு வரவில்லையே' என்று கவலைப்படுகிறோம். வளர்ந்து பேசத்தொடங்கியதும், 'பேச்சை நிறுத்தினால் பரவாயில்லையே?' என்று கலங்குகிறோம். நம்மில் எத்தனை வாசன்கள் என்பது நமக்குத்தான் தெரியும்! அவசியமில்லாத, அறிவற்ற, ஆத்திரப் பேச்சு எனும் மாயவலையில் சிக்கினால் விடுபடமுடியாது என்பது புரிந்தாலும், சிக்குவதைத் தவிர்க்கச் சரியான வழி தெரியவில்லை.

    வேள்வியில் தானமும் பலியும் வழங்கும் நேரத்தில் 'தந்தேன்' என்ற பொருளில் எது சொன்னாலும் அதை வழங்கியது போலாகும். "எமனுக்குத் தந்தேன் உன்னை" என்று எந்த நிமித்தமாக வாசன் சொல்லியிருந்தாலும், அது தானம் தந்ததாகவே ஆகிவிட்டது. அறிவில்லாமல், அவசரத்தில் தான் செய்த தவறை உணர்ந்த மன்னன், கொடுத்த வாக்கை எடுக்க முடியாமல் தவித்தான். பெற்ற பிள்ளையை இழக்க மனமில்லை. 'மரபுப்படிக் கொள்ளி வைக்க சந்ததி வேண்டுமே?' என்ற கூடுதல் சுயநலத்தால் புலம்பினானா? அல்லது, தான் செய்த தவறை எண்ணி உண்மையிலேயே வருந்திப் புலம்பினானா?

தந்தை புலம்புவதைக் கண்டான் நசிகேதன். தான் நினைத்தபடியே தந்தை தன்னை வேள்வியில் தானம் வழங்கியதை எண்ணி நிம்மதியடைந்தாலும், காலனுக்குக் கொடுத்தத் தானம் பற்றிய முக்கியக் கேள்வி ஒன்று அவன் மனதில் எழுந்தது. தந்தையிடம் அக்கேள்வியைக் கேட்குமுன், அவர் கழிவிரக்கம் தணியட்டும் எனக் காத்திருந்தான். தந்தையைப் போல் தானும் அவசரப்படக் கூடாது என்று, பொறுமையாக வாசனின் வருத்த மொழிகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

2010/12/04

வாசன் நசிகேதனை எமனுக்குத் தானமளித்தான்


5
யாகத்தில் என்னைப் பெறுவார்யார் என்றுசந்
தேகத்தில் தன்பிள்ளை நச்சரிக்க - வேகத்தில்
காலனுக்கே தானம்நீ என்றான் மடமன்னன்
பாலடங்க நீர்தெளிப்பார் போல்.

    "என்னை யார் பெறுவார்?", "யாருக்குக் கொடுப்பீர்கள் தானம்?" என்று தொடர்ந்து பலமுறை கேட்டுக்கொண்டிருந்த பிள்ளை நசிகேதனிடம், பொங்கும் பாலை அவசரமாக நீர் தெளித்து அடக்குவது போல், "உன்னை எமனுக்குத் தந்தேன்" என்றான் அறிவில்லாத அரசன்.




    பேராசைக் குடியிருக்கும் மனதில் பொறுமையோ சகிப்புத்தன்மையோ இருப்பதில்லை. எப்படியாவது நினைத்ததை அடைய வேண்டுமென்ற வேகத்துக்கு அடிமையாகிறது உள்ளம். கண்களுக்கு சுயநலக் கண்ணாடி போட்டு விடுகிறது. விளைவு? அவசர முடிவுகள். அவசரக்காரனுக்கும் புத்தி மட்டே. பொறுமையும் சகிப்புத்தன்மையும் ஒன்றை ஒன்று வளர்க்கும் தன்மையன. பொறுமை கோபத்தைக் குறைக்க வல்லது. சகிப்புத்தன்மை எரிச்சலையும் அவசரத்தையும் தவிர்க்க வல்லது. இரண்டையும் வளர்க்கும் உரம் எதுவென்று தெரியவில்லை.

பால் பொங்குகிறது. இறக்கி வைப்பதே உகந்தது என்று தெரிந்தும் அதைத் தணிக்கும் அவசரத்தில் தண்ணீரை அள்ளித் தெளிப்பது, பாலைக் காய்ச்சும் குறிக்கோளுக்கே முரணாவதில்லையோ? நாம் முக்கிய வேலையாக இருக்கும் நேரத்தை மட்டும் சிறு பிள்ளைகள் எப்படியோ தெரிந்து கொண்டு நம்மை அணுகி ஏதாவது கேட்டு நச்சரிப்பார்கள். அந்த நச்சரிப்பைப் பெரிது படுத்தாமல் அமைதியாகப் பிள்ளைகளின் தேவையை தீர்த்தபின் தம் வேலையைத் தொடர்வோரை விட, பிள்ளைகளைச் சற்று நேரம் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டுத் தம் வேலையைத் தொடர்வோர் அதிகம். அவர்களை விட, "அம்மாவிடம் கேள், அப்பாவிடம் கேள்" என்று திசைதிருப்பி கண நேர நிம்மதியைப் பெறுவோர் அதிகம். அவர்களையும் விட, "நான் வேலை செய்வது தெரியவில்லை?" என்று ஏச்சோ அடியோ கொடுத்தனுப்பித் தம் வேலையைத் தொடர்வோர் இன்னும் அதிகம். நம் அவசரம் நமக்கு. நம்மினும் இளையவருக்கும் தேவை உண்டு, அறிவு உண்டு என்பதை மறந்து, எரிச்சலில், அவசரத்தில் அறிவிழந்து முடிவு செய்கிறோம். பிறகு விளைவைச் சுமக்கிறோம். இந்தக் குணம் வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் நம்மைத் தொடர்ந்து வருகிறது. சில சமயம் நம் கண்ணை மூடிப் பெருந்தவறுகளைச் செய்ய வைக்கிறது.

    ன்னனின் பேதமை புரிகிறது. மகன் கேள்விகளின் பின்னே ஏதும் அறிவு இருக்கிறதோ? அண்டவாகை வேள்வியில் இம்மைச் சொத்துக்களை எல்லாம் தந்தை தானமும் பலியும் கொடுத்தாக வேண்டும். மன்னனுக்குப் பிறந்தவன் மன்னனின் சொத்தெனில், தானும் இந்த வேள்வியில் வழங்கப்பட வேண்டியவன் தானே? பெற்ற பிள்ளை என்று ஒரு வேளை வழங்காமல் போனால், வேள்வியின் முழுப்பலன் கிட்டாமல் போய்விடுமா? தந்தைக்கு வேள்வியின் முழுப்பலனும் கிடைக்க வேண்டுமே, தன்னை வழங்க மறந்து விடக் கூடாதே என்ற கலக்கம். அப்படி வழங்கினால், இன்னும் மழலை தட்டும் அதிகம் பயனில்லாத சிறுவனான தன்னை, யார் பெறுவார்கள் என்ற ஐயம். அதனால் தந்தையை அணுகி, "ஐயா, என்னை யாருக்குத் தருவீர்கள்? யார் பெறுவார்கள் என்னை?" என்று தொடர்ந்து கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டான். இதைப் புரிந்து கொள்ளாத மன்னன், அவசரத்தனத்தில் அவசரத்தானம் செய்து விட்டான்.

அறிவற்றச் செயல்களைச் செய்யும் தந்தையின் பழக்கத்தை அறிந்த பிள்ளை (சற்று சிந்தித்தால் அண்டவாகை வேள்வியே அறிவற்ற செயல் என்பதை நசிகேதன் உணர்ந்திருந்தான் என்பது நமக்குப் புலப்படும்), தந்தையின் அவசரபுத்தியையே தனக்குச் சாதகமாக, தந்தையை நல்வழியில் செலுத்த ஒரு சாதனமாக, பயன்படுத்திக் கொண்டான். தந்தைக்குப் பொறுமை கிடையாது என்பது பிள்ளைக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனால் நச்சரித்து, நினைத்ததை நடத்தியே முடித்தான் நசிகேதன் என்றும் தோன்றுகிறது.

அவசரத்தில் அறிவிழந்து வாக்குக் கொடுத்த வாசனின் நிலை என்ன?

2010/12/01

தானே தானமாகத் துணிந்தான் நசிகேதன்


4
தேயும்பொன் காயுமா தானந்தான் தானமா?
சேயுந்தான் செல்வம் எனநினைந்தான் - தீயுள்தான்
போந்தாலும் தந்தைக்குப் பேர்தான் எனத்தேர்ந்தான்
தாந்தானத் தானமெனத் தான்.

    ழியக்கூடிய பொன்மணிகளும், வரண்டுபோன கால்நடைகளையும் வழங்குவது தான் தானமா? 'பிள்ளையும் *செல்வம் தானே?' என்று நினைத்தான். தான் தீயிலிறங்க நேர்ந்தாலும் தன் தந்தைக்குப் பெருமையே சேரும் என்றறிந்து, தானே பயனுள்ள தானம் என்று மனந்தேறினான்.

  தேயும்பொன்: அழியும், மறையும் செல்வம் என்ற பொருளில் வருகிறது
  காயுமா: காயும் ஆ; வரண்டு நிற்கும், நொடிக்கும், தானப்பசுக்களைக் குறிக்கிறது
  ஆர்ந்தான்: அடங்கினான், ஒப்புக்கொண்டான்; ஏற்றான் என்ற பொருளில் வருகிறது
  தாந்தானத் தானமென: தான் தான் அ(ந்த)த் தானம் என
*தான் பெற்ற செல்வங்கள் அனைத்தையும் வழங்குவது அண்டவாகை வேள்விமுறை. 'பிள்ளையும், பெற்ற செல்வம் என்ற வகையில், வழங்கப்பட வேண்டிய தானம் தானே?' என்று நசிகேதன் நினைத்தான். பசும்பிள்ளைக்கு வேள்விமுறைகளும் பயன்களும் பற்றிய அறிவு எப்படி வந்தது என்ற ரகசியம் பின்னொரு பாடலில் விளக்கப்படுகிறது.



    வறு செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதும் தவறு செய்தமைக்கு ஒப்பாகும் அல்லவா? தவறு செய்வோர், பெரும்பாலும், அந்தக்கண அறியாமையில் மயங்கித் தவறிழைக்கிறார்கள். அவ்வாறு தவறு நேரும் பொழுது - சிறு பொய் ஏமாற்று திருட்டிலிருந்து, தீயபழக்கம் வெறி ஆத்திரம் கண்மூடித்தனம் வரை - அதைச் சுட்டிக்காட்டுவதோ, திருத்தம் சொல்வதோ, திசை திருப்புவதோ, நேர்வழியில் செலுத்துவதோ... எதையும் உறுத்தாத வகையில் செய்வது, பக்குவ மனதின் சின்னம். தவறையோ தோல்வியையோ பெரிதுபடுத்தாமல், முயற்சியைப் பாராட்டிச் செப்பனிடச் செய்வது மேலாண்மையின் இலக்கணம் என்று அறிவோம். ஆசிரியர்களைப் புனிதர்கள் என்று போற்றக் காரணம் அவர்கள், அறிவைத் தேடும் முயற்சியில் தவறி விழுபவர்களை விழுந்தது தெரியாமல் எடுத்து நிறுத்தி மீண்டும் சரியான பாதையில் செலுத்துவதனாலேயாகும்.

அந்த வகையில் நசிகேதன் ஒரு சிறந்த ஆசிரியனாகிறான். எத்தனை பிள்ளைகள் தந்தைகளுக்கு முன்மாதிரியாக விளங்குகின்றனர்? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அத்தனை பிள்ளைகளும் தான் என்று தோன்றுகிறது. தந்தைகளான நாம்தான் அதை மறந்து புறக்கணித்து விடுகிறோம். கள்ளமில்லாத பிள்ளைகளின் எண்ணங்களிலும் செயல்களிலும், கள்ளத்தனத்தையும் கண்மூடித்தனத்தையும் ஒரு வகையில் பெற்றவர்களும் பெரியவர்களும் தான் உருவாக்குகின்றனர் - பிள்ளைகளுக்குப் பாதுகாப்பும் பொது அறிவும் வழங்கும் சாக்கில் - என்று தோன்றுகிறது. (தந்தை: இங்கே தந்தை/தாய் இரண்டுக்கும் பொதுச்சொல்; உண்மையில் தாயில்லாமல் சேயில்லை, தந்தையுமில்லை)

    சிறு பிள்ளையென்றாலும் தானம் வழங்குவதன் காரணத்தைப் புரிந்து கொண்டு, பயனில்லாத தானங்கள் செய்யும் தந்தையின் நிலையை எண்ணி வருந்தினான் நசிகேதன். 'தந்தையின் வழியில் குறுக்கிடாமல் அவரை எப்படி நல்வழியில் திருப்புவது? பயனுள்ள தானம் வழங்கிடச் செய்வது எப்படி?' என்று சிந்திக்கையில் அவனுக்கு வேள்விமுறை நினைவுக்கு வந்தது. 'அண்டவாகை வேள்வியில் தந்தை எல்லாச் செல்வங்களையும் வழங்கியாக வேண்டுமே? பயனுள்ள செல்வங்களைத் தானம் கொடுக்கச் செய்வதெப்படி? அவரிடம் இருக்கும் செல்வங்களிலே மிகவும் பயனுள்ள செல்வம் எது?' என்றெல்லாம் நினைத்தான். பின், தன்னைத் தானே பார்த்துத் தெளிந்தான். தான் அந்தத் தானமானால் தந்தையின் தவறு நீங்கி, வேள்விப்பலனும் கிடைத்துவிடும் என்று அறிந்தான். யாருமே தானம் பெறாமல், தன்னை வேள்வித்தீ விழுங்கினாலும் அதனால் தன் தந்தைக்குப் பெருமையே என்று நினைத்தான். தந்தைக்குப் பேறு கிடைக்க, தானே ஒரு பயனுள்ள தானமாவதென்று தீர்மானித்தான். வயதில் சிறியவன் என்றாலும், தன்னால் பிறருக்குப் பயனுள்ள விதத்தில் நடக்கமுடியும் என்று துணிந்தான்.

'தன்னை வேள்வியில் வழங்குமாறு தந்தையிடம் எப்படிச் சொல்வது? பிறர் சொல் கேளாத இவரைத் தன்வழிக்கு, நல்வழிக்குக் கொண்டு வருவதெப்படி? பெற்ற பிள்ளையைத் தானமாக எப்படி வழங்க வைப்பது?' என்று பலவாறாக நினைத்த நசிகேதன், தந்தை வாசனிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்தான்.

2010/11/28

வாசனின் கொடையில் குறைகண்டான் நசிகேதன்


3
புல்லுணாது நீரும் பருகாது கன்றிவாது
நல்பால் தராதிவா நோகுமன்றோ? செல்வழியின்
பொய்யான நீரோடை யன்றோ வெறுங்கொடை
செய்தோர்கள் சேரும் இடம்?

    ந்தக் *கால்நடைகள் புல்லைப் புசிக்கவோ, நீரைப் பருகவோ, கன்றுகளைப் பெறவோ, பால் சுரக்கவோ இயலாதிருக்கின்றனவே? வெற்றுத் தருமங்கள் புரிவோர் சேருமிடம், வழியில் புலப்படும் கானல் நீரோடைக்கு ஒப்பானதல்லவா?

*தராதிவா: தராத இந்த ஆ; ஆ என்றால் பசு; இங்கே கால்நடைக்கு பொதுவாகி வந்திருக்கிறது.


    றம் செய்யும் பொழுது அது பிறருக்குப் பயன்படத்தகுந்ததாக இருப்பின் கொடுத்தவருக்கும் நன்மை - பெறுவோருக்கும் நன்மை. பகட்டுக்காகப் பொதுநலச் சேவைகள் செய்தால் பெறுபவருக்குப் பலனளித்தாலும், கொடுப்பவருக்கு நிம்மதியோ நிறைவோ கிடைப்பதில்லை. கொடையின் இருபுறமும் மேன்மை என்று ஒரு பொன்மொழி உண்டு. இதை சேக்ஸ்பியர் அருமையாகச் சொல்லியிருக்கிறார்:"the quality of mercy is not strain'd... it is twice blest; it blesseth him that gives and him that takes".

    சிகேதன் மனதில் ஓடிய எண்ணங்கள் இவை. தந்தை தானம் செய்த பசு, குதிரை, ஆடு, யானை போன்ற கால்நடைகளும் படைவிலங்குகளும் சோர்ந்து தளர்ந்து வரண்டு போயிருப்பதைப் பார்த்தான். 'நடப்பதற்கே நோகும் இந்தக் கால்நடைகளை வேள்வித் தானமாகவும் பலியாகவும் கொடுத்துப் பெறக்கூடியப் பேறு எத்தகையதாக இருக்கும்?' என்று எண்ணினான். 'பாசாங்குத் தர்மத்துக்குப் பாசாங்குப் பேறு அல்லவா கிடைக்கும்?' என்று அஞ்சினான். சொர்க்கமே கிடைத்தாலும் அது நிலைக்காது என்று அவனுக்குத் தோன்றியது. அறிவுள்ள பிள்ளை அல்லவா? செயலைக் குறை சொல்லாது, பெற்றவனின் அறியாமையை எண்ணி வருந்தினான். 'தருமங்கள் செய்யத் துணிந்திருக்கும் என் தந்தைக்கு அவை பயனற்றுப் போகக்கூடும் என்பது புரியவில்லையே, இதைத் திருத்த முடியுமா?' என்று சிந்தித்தான். அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

2010/11/26

வேள்விப்பலன் குறித்து நசிகேதன் அஞ்சினான்


2
பொன்மா மறைமண்ணும் இன்னும் பலவீந்தும்
பின்னாள் பெறுவானோ பேரின்பம்? என்பிலாப்
பஞ்சாமோ பெற்றவன் ஈகை? பரிதவித்து
அஞ்சும் நசிகேதன் நெஞ்சு.

    பொன், நிலம், விலங்குகள்*, கல்வி* எனும் மண்ணுலகச் செல்வங்களான நான்கினையும் இன்னும் பல செல்வங்களையும் வேள்வித் தியாகமாகவும் தானமாகவும் வழங்கிய அரசன், பிற்காலத்தில் பெற எண்ணும் பேறுகளைப் பெற மாட்டானோ? பஞ்சடைத்த* எலும்பற்றப் பொருள்போல், தன்னைப் பெற்றவனின் தருமங்கள் பயனிழந்து போகுமோ என்று தவித்தது நசிகேதனின் மனம்.

*மா என்பது குதிரை, யானை, எருது, கழுதை போன்ற விலங்குகளைக் குறிக்கும் பொதுச்சொல். இலக்குமி எனப் பசுவுக்கு ஆகிவரும். வீட்டுக் கால்நடை மற்றும் படை விலங்குகளைத் தானமாகவும் பலியாகவும் கொடுப்பது யாக வழக்கம்.
 மறை என்றால் கல்வி. இங்கே வேத அறிவு, மற்றும் வழிபாட்டுப் பயன்களைக் குறிக்கிறது. கல்விப்பயன்களைத் தானமாக வழங்குவதும் வேள்வித்தீயில் இடுவதும் யாக வழக்கம்.
 'பஞ்சடைத்த பொம்மை' என்று ராமாயணத்திலும் வருகிறது. அந்த காலத்திலேயே பஞ்சைப் பிரித்து பொம்மையில் திணிக்கும் நுட்பம் தெரிந்தவர்கள் போல் நம் முன்னோர்.
 நாற்பேறு: விண்ணுலகச் செல்வங்கள் நான்கு - இந்திரபதவி, தேவமகளிர் பணிவிடை, சொர்க்க வாழ்வு, இறவாமை. மண்ணுலகச் செல்வங்கள் நான்கு - பொன், பசு (விலங்கு), மண், அறிவு. மண்ணுலகப் பேறு, நன்மக்கள்; விண்ணுலகப் பேறு, பிறவாமை. மண்ணுலகச் செல்வங்கள் கிடைத்தாலும் நன்மக்கள் பெறத் தவம் செய்திருக்க வேண்டும்; விண்ணுலகச் செல்வங்கள் கிடைத்தாலும், பிறவாமைக்குத் தவமிருக்க வேண்டும். வசதிக்காக நான் பேறு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தாலும், பேறு-செல்வம் இரண்டுக்கும் மிதமான வேறுபாடு உண்டு: செல்வத்தை சேர்க்க, வாங்க, பெற முடியும்; பேறு பெற உழைப்பும் நல்லெண்ணமும் வேண்டும்.



    நேர்வழிப் பயணத்தின் கடுமையும் சோர்வும் தெரிந்தவுடன், அதுவரை மறைந்திருந்த குறுக்கு வழிகள் நம் கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படத் தொடங்குகின்றன. குறுக்கு வழியில் செல்வது தவறா இல்லையா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். பல சமயம் எது குறுக்கு வழி, எது நேர்வழி என்றே தெரியாமல் போய்விடுகிறது. இலக்கே கேள்விக்குறியாகும் பொழுது முயற்சியும் பயணமும் கேலிக்குரியதாகி விடுகிறது. வாழ்விலே சரியான இலக்கை அறிந்து தெளியும் பக்குவம் பெற, ஏதாவது பயிற்சி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

பிறர் துன்பத்தையும் ஏமாற்றத்தையும் காணப் பொறாத நல்மனங்கள் எங்கேயும் என்றைக்கும் உண்டு. சிறுபான்மையானாலும், மகான்களின் இலக்கணம் அத்தகைய மனது. இன்ப-துன்ப, சுக-துக்க உணர்வுகளைக் கடந்த நிலையில், பிறர்நல மற்றும் பொதுநல எண்ணங்கள் அலையும் மனது. சிலருக்கு பிறப்பிலேயே அந்தப் பக்குவம் கிடைக்கிறது. பலருக்கு அனுபவங்களால் வளர்கிறது. நாளின் சில மணிகளேனும் தன்னலமில்லாது நடக்க முயற்சிப்பது சாத்தியமா?

    சிகேதன் இன்னும் பால் மணம் மாறாச் சிறுவன். மற்றச் சிறார்போல் அவனும் ஆடு, மாடு, புலி, யானை என்று பஞ்சடைத்த பொம்மைகளுடன் விளையாடியிருப்பான். அவை பஞ்சடைத்த பொம்மைகள், உயிரில்லாத, எலும்பில்லாத பொம்மைகள் எனப் புரிந்தவன். பொம்மையின் பயன்கள் நீடிக்காதென்ற அறிவு அவனுக்கு இருந்தது. பஞ்சுப் பொம்மைத் தன்மையினவோ என்று நசிகேதன் அஞ்சும்படி, பயனிலாத் தானம் புரிந்தானா வாசன்? குறுக்கு வழியில் பெரும்பேறு அடைய நினைத்தானா? மன்னனின் பேராசையைப் பற்றி மைந்தனுக்கு என்ன கவலை? தனக்குச் சேர வேண்டியவை தானத்தில் போவது கண்டப் பதற்றமா? இல்லை. 'பெற்றவன் பேறு பெறாது ஏமாறுவானோ?' என்றஞ்சியப் பிஞ்சு மனதுள் தன்னலமில்லை. பின், அய்யனின் ஈகையில் என்ன குறை கண்டான் இளவல்? 'ஏமாற்றாதே ஏமாறாதே' எனும் ஏமாற்றச் செயல்-விளைவு வட்டம் அவன் மனதில் சுற்றியதேன்? அப்படி என்ன கவனித்தான்?

2010/11/24

தந்தையின் வேள்வியை நசிகேதன் கவனித்தான்


1
விண்மேவும் நாற்பேறும் வேண்டிய வாசரசன்
கண்போலுங் கிள்ளை நசிகேதன் - மண்ணரசன்
சேர்த்திருந்த நாற்பேறும் வேள்வியில் வீசியதைப்
பார்த்திருந்தான் பால்மணத் தான்.

    வாசன்* என்றொரு அரசன், தன் மகன் நசிகேதனைக் கண்போல் வளர்த்து வந்தான். சொர்க்கவாசம், இந்திரபதவி, தேவமாதர் பணிவிடை, இறவாமை எனும் நால்வகை விண்ணுலகச் செல்வங்களை அடைய விரும்பிய வாசன், மண்ணிலே தான் சேர்த்த நான்கு வகைச் செல்வங்களையும் அண்டவாகை* எனும் வேள்வியிலே வழங்கிக் கொண்டிருந்தான். இன்னும் பால்மணம் மாறாப் பசும்பிள்ளையான நசிகேதன், தன் தந்தையும் அரசனுமான வாசனின் வள்ளன்மையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

*வாசன்: கடோபனிஷதில் அரசனின் பெயர் வாஜஸ்ரவஸ்
 அண்டவாகை: விஸ்வஜித் எனும் யாகம்
 பால்மணத்தான்: குழந்தை, சிறுபிள்ளை



    சைக்கும் பேராசைக்கும் உள்ள வேறுபாட்டை நம்மில் எத்தனை பேர் அறிந்து நடக்கிறோம்? நாமறிந்த இன்றையத் தேவைகள் தீர ஆசைப்படலாம். கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படும் நாளைய தேவைகளைத் தீர்த்துக் கொள்ள ஆசைப்படலாம். அறிவுக்குப் புலப்படும் எதிர்காலத் தேவைகளைத் தீர்க்க ஆசைப்படுவதும் முறையே. ஆனால், அறிவுக்கும் புலப்படாதத் தொலைகாலத் தேவைகளை, அனுமானங்களை, தீர்த்துக் கொள்ள ஆசைப்படுவது முறையாகுமா?

    யிருள்ள போது இந்த உலகத்தில் சுகம் பெற நினைப்போர் எளியோர். இறந்தபின் விண்ணுலகிலும் சுகம் அனுபவிக்க நினைத்தான் மன்னன். சொர்க்க சுகம் அனுபவிக்கும் ஆசை முறையென்றே கொண்டாலும், அது நிறைவேற இவ்வுலகச் சொத்துக்களை, இல்லாதாருக்கு பயன்படக்கூடிய சொத்துக்களை, வேள்வியிலிடுவதும் தானம் தருவதும் முறையா? பொறுப்புள்ள மன்னனின், ஒரு குடும்பத் தலைவனின், அறிவுள்ள மனிதனின் செயலாகுமா? தந்தையின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த நசிகேதன் மனதில் என்ன ஓடியது? வள்ளலென்று நினைத்தானா, வேடமென்று நினைத்தானா?

2010/11/21

அறிவணக்கம்


• இயக்கங்களின் பலனாக வேண்டியது அமைதி - இது நெறி.
• இயக்கங்களின் பலனாக விளைவதோ பேராசை, பகை, போர், குழப்பம் - இது நிலை.
• நெறி மறந்ததால் நிலையடைந்தோமா? நிலையடைந்ததால் நெறி மறந்தோமா?

நம் இயக்கங்களுக்கெல்லாம் காரணம் அறிவு. இயக்கங்களின் பயனாக அமைதியைப் பெற, நல்லறிவை வளர்க்க வேண்டும். நல்லறிவை நாடி நசிகேத வெண்பாவைத் தொடங்குவோம். (அறிவணக்கம், ஆசிரியப்பா)


அறிவணக்கம்

ஆதியும் அறிவாகும், அந்தமும் அறிவாகும்!
மேதினி யிதிற்பே ராசையும் பகையும்வீண்
சாதியும் பலசடங்கு போதித்திடும் சமயஞ்செய்ச்
சேதமே எனச்சொல்லும் நீதியைத் தினமோதத்
தீதினித் தொலையட்டும்! தேன்தமிழ் உலகம்
மீதினில் அமைதி மேவித் தங்கட்டுமே!

    ம் இயக்கங்களின் விளைவாக நாம் அமைதிப் பாதையில் போகலாம்; அல்லாத வழியிலும் நடக்கலாம். அமைதியல்லாத வழியில் இன்பங்களைச் சந்திக்கிறோம், துன்பங்களையும் சந்திக்கிறோம். இன்பதுன்பங்களின் பாதிப்பினால் அமைதியை இழக்கிறோம். அமைதிப் பாதையில் இன்ப துன்பங்கள் இல்லையா? உண்டு. அமைதிப் பாதையில் இன்பம் துன்பம் என்ற எதிர்நிலை உணர்வுகள் இல்லை. அமைதிப் பாதை ஒரு இலக்கினை நோக்கிய பயணம். மற்ற பாதை இலக்கற்ற பயணம். கால் போன போக்கில் மனம் போகும் பயணம்.

நம் இன்பதுன்பங்களின் ஆணிவேர்கள் யாவை? ஆசையும் பகையும். ஆணிவேரின் விதை? அறியாமை. இன்பதுன்பங்களைப் பெறச்செய்யும் பொறாமை, முட்டாள்தனம், சினம், பேராசை, சுயநலம் போன்றவை அறியாமையின் வெளிப்பாடுகளே. அறியாமை விழலுக்கு நீர் வார்ப்பது, நம் கண்மூடித்தனம். கண்களை மூடுவதோ, தேவையில்லாத பிரிவினை மற்றும் பழக்கங்கள் பற்றியப் போதனை. இந்தப் போதனை பல வழிகளில் கிடைக்கிறது. இந்தப் போதனையும் அறிவு தான். ஆனால் அறியாமையை வளர்க்கும் போலி அறிவு. பூஞ்செடியில் புல்லுருவி. கண்களை மூடச் செய்யும் போதனைகள் நல்லறிவுத் தேடலா? நாமே தீர்மானிக்க வேண்டும். வேறெந்தப் பிறவியிடமுமில்லாத ஒரு மகத்துவம், மனிதராகிய நம்மிடம் உண்டு. அறிவு. நல்லவை அல்லவை என ஆய்ந்தறியும் பகுத்தறிவு.

பகுத்தறிவு நல்ல உள்ளத்தை வளர்க்கிறது. பிரிவினை பகை பேராசையிலிருந்து விலகி நம்மை அமைதிப் பாதையில் அழைத்துச் செல்ல வல்லது. உண்மைகளைத் தேடுவதால் வளர்கிறது. கல்வி, பகுத்தறிவை வளர்க்கிறது. வாழ்க்கையில் பிழைப்புக்காக கற்பது மட்டுமல்ல கல்வி. பிழைப்புக்கான நம் நடத்தைகளின் விளைவை, நம்மையும் நம் சுற்றத்தையும் நாம் வாழும் இந்த வையத்தையும் நம் செயல்கள் தினம் பாதிக்கின்றன என்ற உண்மையை, நீதியை, அறியச் செய்வதே கல்வி. கண்மூடித்தனத்தைக் களையச் செய்வதே கல்வி.

அமைதியைக் குலைக்கும் வழி தவிர்ப்போம் எனச் சொல்வது எளிது; செயலாக்கம் கடினம். விளைவுகளுக்கு நம் செயல்களே காரணம், நம்மைத் தவிர வேறெவரும் காரணமில்லை என்று உணர்ந்தோமானால், அது அறியாமையைக் களையும் முதல் செயல். அமைதிப் பாதையின் முதல் படி. அமைதிக்கேடான வழியில் நம்மைச் செலுத்தும் போதனைகள் - மதமோ சமூகநெறியோ குறுங்கல்வியோ அரசியலோ - எதுவும் நமக்கு வேண்டாம். ஆய்ந்தறியும் உள்ளம் பெறுவோம். அறியாமையில் முளைத்த பேராசை-பகையினை வேரறுப்போம். அறிவை வளர்ப்போம். அமைதியை நாடுவோம்.

தமிழ் பாடும் உலகெங்கும் பகையொழியட்டும். தமிழோசை போல் அமைதி நிலைக்கட்டும்.

2010/11/19

நூல் அறிமுகம்

    டோபனிஷது கி.மு 400-200ல் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. பல செய்யுட்கள் நேராகவும் மேற்கோள்களாகவும் கீதையில் காணப்படுவதால், இந்நூல் மகாபாரதக் காலத்தினின்றும் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. சிறுவன் நசிகேதன் எமனைச் சந்தித்து வரம் பெறும் விவரங்கள் நூலின் முதல் மூன்று பகுதிகளிலும், தன்னறிவு பெறும் வழிமுறைகள் கடை மூன்று பகுதிகளிலும் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

கடோபனிஷதக் கதைச் சுருக்கத்தையும் பகுதிச் சுருக்கத்தையும் கொடுத்திருக்கிறேன். பகுதிச் சுருக்கத்தைத் தொடர்ந்து, பகுதியின் சிறப்பை (என் கணிப்பில்) எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அனுபவிக்க வேண்டிய கருத்தாழங்கள் இவை.

கதைச்சுருக்கம்: பேரின்பம் அடையப் பேராசை கொண்ட மன்னன், ஆத்திரத்தின் விளைவால், தன் ஒரே மகனை வேள்வியில் மரணதேவனுக்குத் தானமாகக் கொடுக்கிறான். மனித இளவரசனோ மரணதேவனிடமே மெய்யறிவு பெற்றுச் சிறப்போடுத் திரும்புகிறான். இச்சம்பவங்களின் பின்னணியில் இடம்பெறும், அறிவுச்சுடரான இளைய நிலாவுக்கும் ஆசிரியனான மரணதேவனுக்கும் இடையிலான உரையாடலே கடோபனிஷது.

பகுதி 1: விண்ணுலகப் பேரின்பங்களை அடைய விரும்பிய மன்னன் வாசஸ்ரவசு, விஸ்வஜித் எனும் பெரிய வேள்வியைச் செய்கிறான். யாகத்தில் தன் சொத்துக்களைத் தானமும் தியாகமும் செய்து வருகையில், தன் ஒன்பது வயது மகன் நசிகேதனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பொறுமையில்லாத நிலையில் மகனையே தியாகம் செய்வதாக வாக்களித்து விடுகிறான். தன் அவசரத்தையும் ஆத்திரத்தையும் எண்ணி வருந்துகிறான். தந்தைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நசிகேதன் எமனுலகம் போகிறான். எமனிடம் வரம் பெற வாய்ப்பு கிடைக்கிறது. உலகச் சொத்துக்களையும் இன்பங்களையும் வரமாகத் தருவதாகச் சொன்ன எமனிடம், தனக்கு மரணத்தைப் பற்றிய அறிவைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்று பிடிவாதமாகச் சொல்கிறான். நசிகேதனின் மனப்பக்குவத்தையும் தீர்மானத்தையும் கண்டு மகிழ்ந்த எமன், நசிகேதனுக்கு மரண அறிவையே வரமாகப் போதிக்கத் தொடங்குகிறான்.

பகுதியின் சிறப்பு: மெய்யறிவு பெற மாணவனுக்குத் தகுதி இருக்கிறதா என்று ஆசிரியர் சோதிக்கும் கட்டங்களின் வழியாக உடல், உயிர், உலகம், செல்வம், ஆசை இவற்றைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் வற்றாத அறிவுக்கேணி.

பகுதி 2: "நன்மை வேண்டுமா, இன்பம் வேண்டுமா?" என்ற நுட்பமானக் கேள்வியுடன் நசிகேத போதனையைத் தொடங்கும் எமன், இருநிலை-எதிர்நிலைத் தன்மையதாய் இயற்கையிலேயே தோன்றும் இருள் ஒளி, இன்பம் துன்பம், அறிவு அறியாமை போன்றவற்றின் ஒருமைத் தன்மையினை விவரிக்கிறான். அறிஞர்-அறிவிலி இருதரப்பினரையும் அடையாளம் காட்டுகிறான்.

பகுதியின் சிறப்பு: காரண-காரியத் தொடர்பும் தொடர்பின்மையும் மிகச் சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 'இறப்பும் இல்லை இறப்பவனும் இல்லை' எனும் ஆழ்ந்த வேதாந்தம் கீதையில் அப்படியே வருகிறது. விளைவிலிருந்துச் செயலை வேறாகக் காணும் பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது. எதிர்நிலைகள் போல் தோன்றும் இருளும் ஒளியும் ஒன்றிலிருந்தே தொடங்குவதால் அவற்றை ஒன்றெனக் கருதிச் செயல்படும் மனப்பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது.

"நன்மை வேண்டுமா, இன்பம் வேண்டுமா?" என்ற எமனின் கேள்வியே உலகின் மிகப் பிரபல வேதாந்தக் கேள்வியாகும். கடோபனிஷதச் சமகாலச் சாக்ரேட்ஸ், பின்னாள் அரிஸ்டாடில் போன்ற வேதாந்திகளும், மதவாதிகளும், தம் எண்ணங்களை வலியுறுத்தப் பயன்படுத்தியக் கேள்வி. இந்நாள் முரண்பாடுகளின் அடிப்படைகளை அறிந்துச் செயல்பட, நாம் பயன்படுத்தக்கூடிய சாதனமுமாகும் இந்தக் கேள்வி.

ஆசிரியர்-மாணவர், அறிஞர்-அறிவிலி பற்றியக் கருத்துக்கள் சிறப்பானவை. சிந்தனையைத் தூண்டுவன.

பகுதி 3: மனித உள்ளத்தின் விழிப்பையும் எழுச்சியையும் உள்ளுக்குள் திருப்பும் தேவை மற்றும் முறைகளைப் போதிக்கிறான் எமன். நசிகேதன் இவற்றை அறிந்து கொண்டு நன்றி சொல்கிறான்.

பகுதியின் சிறப்பு: விழிப்பு என்பது உள்ளுக்குள் ஏற்பட வேண்டிய ஒன்று என்பதை எடுத்துக்காட்டியிருக்கும் விதங்களை எத்தனை முறை ரசித்தாலும் திகட்டாது.

பகுதி 4: "உண்மையறிவு என்பதென்ன?" என்று கேட்ட நசிகேதனுக்கு, எமன் உள்ளுணர்வையும் உள்விழிப்பையும் உள்ளெழுச்சியையும் பற்றிப் போதிக்கிறான். உலகறிவுக்கும் உண்மையறிவுக்குமான வேறுபாட்டை அறிகிறான் நசிகேதன்.

பகுதியின் சிறப்பு: மனதை ஒருநிலைப்படுத்தி உள்ளுக்குள் எரியும் தீயை உணர வேண்டிய அவசியம் மீண்டும் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

பகுதி 5: மரணத்துக்குப் பிறகு உயிருக்கு (ஆத்மா) என்ன ஆகிறது என்பதை மீண்டும் விளக்குகிறான் எமன்.

பகுதியின் சிறப்பு: 'ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்குச் செல்லும் இடைவிடாதப் பயணத்தில், பிறப்பும் வாழ்வும் வழி நிறுத்தங்கள்' என்ற நுட்பமானக் கருத்து விவரிக்கப்பட்டிருக்கிறது. மரணமும் பிறவியும் எதிர்நிலைகள் அல்ல என்ற அறிவு திடீரென்றுத் தாக்கித் திக்குமுக்காட வைக்கிறது.

பகுதி 6: மரணபய வெற்றியின் ரகசியத்தையும் அதையறிய வேண்டிய அவசரத்தையும் மீண்டும் விளக்குகிறான் எமன்.

பகுதியின் சிறப்பு: நம் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தலைகீழாக மாற்றக்கூடிய வகையில் சில விவரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இருளின் முடிவில் ஒளியைப் பார்த்துப் பழகிய நம் கண்களை, ஒளியின் முடிவில் இருளிருப்பதைக் காணவைக்கிறது.

அமைதிக்கான அறிவையும் மரணதேவனின் அருளையும் பெற்ற நசிகேதன், தன் தந்தையிடமே திரும்பி வருகிறான். நீண்ட நாட்கள் நல்லரசனாகவும் நல்ல மனிதனாகவும் வாழ்கிறான்.

இனி, நசிகேத வெண்பா.

2010/11/17

என்னுரை

    'உபநிஷது' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'பிரம்மத்தைப் பற்றிய அறிவுரை' என்று பொருள். 'பிரம்மம்' என்றால் மெய்யறிவு. 'பிரம்மன்' என்ற சொல்லுக்கு 'அறிந்தவன்' என்று பொருள் உண்டு. 'அகம் பிரம்மம்' அதாவது 'தானே பிரம்மம்' என்ற பொதுவான நோக்குப்படி பார்த்தால், 'தானே அறிவு' அல்லது 'தன்னைப் பற்றிய அறிவு' என்று பொருள் கொள்ளலாம். சுய அறிவு என்று நான் பொருள் கொண்டிருக்கிறேன். கடோபனிஷது: ஒரு கதை வழியாக மனித நேயங்களைப் பற்றிய போதனை. தன்னறிவுக்கான வழிகாட்டி.

கடோபனிஷதைப் புரிந்து கொள்ள, நான் படித்தாலோசித்தப் புத்தகங்கள்:
• ஸ்ரீ சந்திரவசு எழுதிய 'யஜூர்வேதீய கடோபனிஷத ப்ராரம்ப:' எனும் வடமொழி நூல் (1900 காலப் பதிப்பு, சிகாகோ பொது நூலகம்)
• சந்திரவசுவின் புத்தகத்தைப் பற்றி சிகாகோ மாணவர்கள் எழுதியப் பழைய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள் (சிகாகோ பொது நூலகம்)
• 'ஆதிசங்கரர் எழுதிய கடோபனிஷத பாஷ்யம்' பற்றிய ஆங்கில விளக்கக் கட்டுரைகள் (உலக வேதாந்தக் கல்வி, சிகாகோ பொது நூலகம்)
• திரு.ராஜாஜி எழுதிய கடோபனிஷத நூல் சுருக்கம் (வானதி பதிப்பகம்)
• சுவாமி சின்மயானந்தாவின் கடோபனிஷத விளக்கம் (சின்மயா மிஷன்).

சந்திரவசுவின் வடமொழி வடிவத்தில் ஆறு பகுதிகள், நூற்றுப் பத்தொன்பது செய்யுட்கள் உள்ளன. பிற புத்தகங்களில் ஒன்றிரண்டு கூடவோ குறையவோ காணப்படுகிறது.

வடமொழிக் கடோவில் ஆறு பகுதிகள். முதல் மூன்று பகுதிகளின் கருத்துக்களே மீண்டும் கடை மூன்றில் சொல்லப்படுகின்றன. கடோவைத் தழுவி எழுதினாலும், தமிழில் சற்றுச் சுறுக்க நினைத்திருக்கிறேன்.

தமிழ் நூலில் சற்றே மாறுபடவும் எண்ணியிருக்கிறேன். உதாரணமாக, 'நசிகேதன் எமன் வீட்டில் காத்திருந்தான்' என்ற சாதாரணக் கருத்தைப் பல பாடல்களில் விளக்கும் வடமொழிச் செய்யுட்களைச் சுருக்க முற்பட்டிருக்கிறேன். யாக மற்றும் யோகச் சடங்குளின் விவரங்களாக எழுதப்பட்டிருக்கும் பல செய்யுட்களை ஓரிரு செய்யுளில் சுருக்க எண்ணியிருக்கிறேன். ஒரே செய்யுளில் சொல்லப்பட்டிருக்கும் சில அருமையான கருத்துக்களை விரிவாக்க முயற்சித்திருக்கிறேன். எனவே, செய்யுட்கள் குறையுமா கூடுமா என்பதை இப்போது கணிக்க இயலவில்லை. என்னிடம் இருப்பவை நானெடுத்தக் குறிப்புகள் மட்டுமே :)

நானும் அரசனும் தொடங்கிய கூட்டு முயற்சி எனினும், கடவுள்-மத நம்பிக்கையின்மை குறுக்கே வருகையில், எடுத்துக்கொண்ட சுதந்திரங்களுக்கு (தவறுகளுக்கும்) நானே பொறுப்பு. நசிகேத வெண்பாவின் சில சுதந்திரங்களையும் வேறுபாடுகளையும் விலகல்களையும், இங்கே குறிப்பிடவேண்டியது என் கடமை. உதாரணமாக, நசிகேத வெண்பாவில்
• ஓம் என்ற சொல் ஒரு தியான சாதன ஒலி மட்டுமே
• கடவுள் வாழ்த்துக்குப் பதில் அறிவுக்கு வாழ்த்து
• 'ஆரியன்' போன்ற சமூகக் குறிப்புணர்த்தும் விவரங்கள் இல்லை
• சடங்குளின் விவரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன
• 'ஆண்களுக்கு மட்டும்' என்று எதுவும் இல்லை
• மரணபய வெற்றியின் ரகசியம் பொதுவுடமை (வடமொழியில், 'தகுதியுடையோர்' புரிதலுக்கு மட்டுமே!)

நூலின் கருப்பொருள் சேதமடையவில்லை என்று நம்புகிறேன். தமிழ் வடிவில் குற்றமோ தவறோ இருந்தால், அதற்கு என்னுடைய சிற்றறிவும் கவனக்குறைவுமே காரணம். கடவுள் மதக் கொள்கைகளில் வேறுபட்டாலும், வாழ்க்கை நெறிகளிலும் மனிதநேயத்திலும் நம்மில் பெரும்பாலானோர்க்கு பொதுவான நம்பிக்கை உண்டு. அந்த வகையில், இந்த நூல் படிப்போர்க்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உளமார்ந்த நன்றி
• நூலகத்துள் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் புத்தகங்களைத் தினமும் எனக்காக ஒதுக்கிவைத்த சிகாகோ பொது நூலகத்தின் சூசன் பெகோஸ்காவுக்கு
• ஓய்வுக்காக இலங்கை சென்ற பின்னும், நான் எழுதியவற்றைப் படித்துத் திருத்தங்களும் அறிவுரையும் ஊக்கமும் அவசரமும் கொடுத்த அரசனுக்கு
• என் எழுத்தையும் ஒரு பொருட்டாக எண்ணிப் படிக்கத் துணிந்திருக்கும் அன்புக்குரிய உங்களுக்கு.

2010/11/15

அஞ்சலி

    நான் படித்த இந்துமதப் புத்தகங்களில், 'கடோபனிஷது' தனித்து நிற்கிறது. கடவுளையும் மதத்தையும் ஒதுக்கிப் பார்த்தால், இந்தப் புத்தகத்தைப் பேரறிவுப் பெட்டகம் எனலாம். அறியாமை இருளும் பேராசைக் குளிரும் விலக, புத்தகத்தின் கருத்தொளியில் இளைப்பாறலாம். மானிடம் மரணதேவனுடன் உரையாடுவதில் புதைந்திருக்கும் இலக்கியத்தனமா, அசாதாரண ஆழ்ந்தறிவின் வெளிப்பாடா, எதுவோ தெரியவில்லை - மரணத்தையும் மனித நேயத்தையும் இணைப்பதில் ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று நினைக்கிறேன்; காலப்பயணத்தில் நான் நெடுந்தூரம் வந்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் - கடோபனிஷது பிடித்திருக்கிறது.

அரசன் எனக்கு ஆசிரியரும் நண்பரும் ஆவார். ஐந்து வருடங்களிருக்கும், மறைந்த நெருங்கிய நண்பர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மினியெபொலிசிலிருந்து நானும் அரசனும் திரும்பிக் கொண்டிருந்தோம். நானூறு மைல்களுக்கு மேலானப் பயண அலுப்புத் தீரப் பேசிக் கொண்டிருக்கையில், மரணம் பற்றிப் பேச்சு வந்தது. கடோபநிஷது புத்தகம் பற்றிச் சொன்னேன். உற்சாகத்துடன் தன் கருத்துக்களைச் சொன்னார். தமிழிலேயே பாடலுடன் எழுதப்பட வேண்டிய புத்தகம் இது என்று இருவரும் நம்பிய அந்தத் தருணத்தில் பதிவுக்கான விதை கிடைத்தது. அரசன் தொடங்கிய 'பூத்தூரிகை' வலைப்பூவில் அவருடன் எழுத வாய்ப்பும் கிடைத்தது.

துருப்பிடித்திருந்த என் தமிழை உருப்படுத்தியவர் அரசன். கடோபனிஷதைத் தமிழில் வசனக்கவிதையாக எழுத நினைத்த என்னை மரபுக்கவிதை எழுதத் தூண்டினார். எழுதுவது சுலபமென்று (சிறுபிள்ளைத்தனமாக) நினைத்ததால், வெண்பா வடிவைத் தேர்ந்தெடுத்தேன். 'கருத்தை எழுது, பின் திருத்தம் செய்வோம்' என்று அரசன் தந்த ஊக்கத்தில் தொடங்கி நின்றுபோன முயற்சி, மீண்டும் துளிர்த்திருக்கிறது. காரணமில்லாது அரசன் தொடங்கியதை, நான் காரணத்துடன் முடிக்க விரும்புகிறேன்.

ஒரு மரணத்தில் முளைத்த விதை இன்னொரு மரணத்தில் மரமாகுமா?

சில நாட்களுக்கு முன் மறைந்த நண்பர் அரசனுக்கு, இது என் உயிரிலிருந்து வரும் சிறிய அஞ்சலி. நல்ல ஆசிரியனுக்கு ஒரு மோசமான மாணவனின் மனந்திருந்தியக் அஞ்சலி.

2010/11/13

தொடங்குமுன்...


     'சயிருத்தீன் முகமது பின் ஒமர் ஷெய்க்' எனும் மாமன்னன் இந்தியாவின் பல இடங்களைக் கைப்பற்றினான். அசோகருக்குப் பிறகு, இந்தியாவின் துண்டுப் பிரதேசங்களை ஒரே அரசக்குடைக்குள் கொண்டு வந்த இவனுக்கு, பாபர் என்று ஒரு பொதுப்பெயர் உண்டு.
     வடக்கை வென்ற பொழுது, உள்ளூர் மன்னன் சிற்றரசர்கள் தலைவர்கள் எனப் பொதுமக்களின் அபிமானம் பெற்றப் பலரைச் சிறையிலடைத்தானாம். அதில் ஒரு ஆசிரியரும் அடக்கம். அறிவொளி தெறிக்க நின்ற முதிர்ந்த ஆசிரியரைச் சிறையில் சந்தித்த மன்னன், "நான் உலகை வென்ற மாமன்னன். அறிஞர்களை மதிப்பவன். உனக்கு என்ன வேண்டும்? பொன் பொருள் பெண் சிற்றூர் எது வேண்டுமானாலும் கேள், என்னால் தர முடியும்" என்றானாம். அதற்கு அவர் நிதானமாக, "அய்யா, நீ மாமன்னனாக இரு, தவறில்லை. உலகமே உன்னை வணங்கட்டும், நன்று. ஆனால் சூரிய ஒளியை மறைத்தபடி நிற்கிறாய், கொஞ்சம் ஒதுங்க முடியுமா ஐயா?" என்று கேட்டாராம். தன் தவறைப் புரிந்து கொண்ட மன்னன் வெட்கி, ஆசிரியரிடம் மன்னிப்புக் கோரி, அவரை விடுதலை செய்தானாம்.

'ஐயா, உலகத்தையே வென்ற உன்னால், இதைத் தருவேன் அதைத் தருவேன் என்று கொக்கரிக்கும் உன்னால், ஒளியைத் தர முடியுமா? உனக்கும் உன் பாட்டனாரின் பல்லாயிரம் பாட்டனாருக்கும் முன்பிருந்து, யாரும் கேளாமல் தானாகவே வந்து இருளை அகற்றிக் கொண்டிருக்கிறதே - இயற்கை ஒளி - அதற்கு ஈடாக உன்னால் என்ன தரமுடியும்? எனக்குச் செல்வம் தேவையில்லை; உடைமை தேவையில்லை; வெற்றி தேவையில்லை. என் தேவை அறிவு. அறியாமை அச்சுறுத்தும் பேரிருள்; அறிவே அவ்விருளகற்றும் ஒளி. என்னிடம் அறிவு இருக்கிறது. அது அறிஞர்கள் தொடர்பால் இன்னும் வளர்கிறது. உன்னால் அறிவைத் தர முடியுமா?' என்பதே சிறைப்பட்ட ஆசிரியரின் விண்ணப்பத்துக்கு உட்பொருள்.

எது வெற்றி? எது செல்வம்? எது ஆளுமை? 'கொண்டு வந்ததென்ன, இதில் கொண்டு போவதென்ன?' என்றச் சாதாரணத் தத்துவத்தின் புதைபொருள் புரிந்தவர்களுக்கு, மேற்கண்டச் சாதாரணக் கேள்வி-பதில் விளக்கம் அசாதாரணமாகத் தோன்றும். அவர்களுடன் இந்த வலைப்பூ வளரும்.