வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/04/05

நூற்பயன், நன்றி


நசிகேத நூலிது நன்னெறிக் கேணி
பசித்தவர்க்கு அன்னமழை போன்றாம் - உசிப்பொருளை
தப்பா துரைத்தேன் இருதாய்க்கும் ஏனோர்க்கும்
அப்பா துரையின் அகம்.

   சிகேதன் கதையை விளக்கும் இந்நூல், நெறிகளுக்கான ஊற்று. பசித்தோர் மேல் பொழியும் அன்னமழை போன்றது. மெய்யறிவின் நுண்மையைப் பிறழாது சொல்லியிருக்கிறேன். என்னைப் பெற்ற இரண்டு தாய்களுக்கும், (தொடர்ந்து படித்த) அனைவருக்கும் (இந்த) அப்பாதுரையின் ஆன்மாவில் பங்குண்டு.


உசிப்பொருள்: நுட்பம், மெய்யறிவு
அகம்: ஆன்மா, மனம், உயிர்



    சிகேத வெண்பா மனித நேயத்தையும் நெறிகளையும் விளக்கும் வற்றாத நீரூற்று போன்றது. பசித்துக் கிடப்போர் மேல் பொழியும் அன்னமழை போன்றது. நசிகேதன்-எமனுடனான உரையாடலைப் பல முறை படித்துப் பயனடையலாம். அவையோர் முன் நசிகேதன் உரைத்தது எமனிடம் அவன் பெற்ற அறிவின் சாரம். மரணம் பற்றிய அறியாமையையும் அவை தொட்டக் கண்மூடித்தனங்களையும் ஒழிக்க நசிகேத வெண்பா ஒரு அறிவுக்கருவி. மெய்யறிவுக்கானத் திறவுகோல்.

கடோபனிஷது நூலில் நான் கற்ற மெய்யறிவின் நுண்மையினை, நசிகேத வெண்பா எனும் இத்தமிழ் நூலின் வழியாகப் பிழையில்லாது எடுத்துச் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

என்னைப் பெற்றெடுத்த என் தாய்க்கும் தமிழுக்கும், தளராமல் என்னுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பயணித்த உங்கள் அனைவருக்கும், நன்றி.

தொடர்ந்த வாசிப்புக்கும் ஆதரவுக்கும், சுவையாகச் சிந்திக்க வைத்த அறிவார்ந்த பின்னூட்டக் கலந்துரையாடலுக்கும், கடன் பட்டிருக்கிறேன். வற்றாத நன்றிப் புனலை உங்கள் முன்வைத்து அவையடங்கி விடைபெறுகிறேன்.

தாயையும் தமிழையும் போலவே, என் ஆசான்களுக்கும், உங்களுக்கும் என் உயிரில் இடமுண்டு. ஆன்மாவில் பங்குண்டு.

தமிழ் வாழும் நல்லுலகெங்கும் அமைதி நிலவட்டும்.


//நசிகேத வெண்பா நிறைவுற்றது//